Thursday, June 23, 2005

எப்போதோ புலம்பியது..

90களின் கடைசியில் நான் புலம்பியவைகளிலிருந்து சில..

மூவிரண்டு வருடங்களாய்
முயற்சித்து பார்க்கிறேன்
காலையும் மாலையும்
காத்திருந்து கலைகிறேன்
கற்பனையில் உருவான்
கண்மனிய காணலையே.!

என் வயசு பசங்களெல்லாம்
எப்படியோ தானிருக்க
நான் மட்டும் soloவாய்
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...

நீ வர தட்சணையாய்
சேமிப்பு கணக்கில்
சேர்த்தது ஏராளம்
இத்தனையும் இருப்பில் கொண்டு
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...

சந்தர்ப்பங்களால் உந்தப்பட்டு
கொள்கைகளில் கொஞ்சம்
பிறழியிருக்கிறேன்
ஆனால் ஒன்றில் மட்டும்
உறுதியாயிருக்கிறேன் - அதை
உனக்கு மட்டுமே
ஒதுக்கியிருக்கிறேன்
இவையெல்லாம் பின்பற்றி
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...

sockets முதல் சாம்பார் வரை
அத்தனையும் அத்துபடி
இத்தனையும் அறிந்து வைத்து
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...

இளநிலையோ இழுக்காகும்
என்றெண்ணி உனக்காக
முதுநிலையும் முடித்து வைத்தேன்
இவையெல்லாம் பயின்று வைத்து
இன்னும் எத்தனை நாள்
காத்திருக்க...

எங்கிருந்தோ எனை இயக்கும்
இளையவளே என் இனியவளே
முகம் காட்ட மறுக்கும் தேவதையே
என்று வருவாய்
என் ஏக்கம் தீர்க்க.?

மணமானால் மாறிவிடுவேனாம்
அதற்காகவேனும்
மங்கை நீ வந்தால் மாட்சி பெறுவேனாம்
இதற்காகவேனும்
இன்றே வருவாயா
இயம்புக சகியே..!

--------- தவிப்புடன் நான்..

2 ருபாய்க்கு ஒஸ்தாரா?

இது நடந்தது 1996ல் நான் M.Tech படிக்கும் போது. ஆந்திராவின் உள்ள ஒரு சுயாட்சி பெற்ற பல்கலைகழகத்தில் ரெசிடெண்ட் மாணவனாக படித்துகொண்டிருந்தேன், மிக கட்டுபாடான கல்லூரி, ஹாஸ்டலும் கல்லூரியும் அருகருயே அமைந்திருப்பதால் வெளியில் செல்லும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்தியாவின் பல பகுதியிலிருந்தும் மாணவர்கள் இங்கு படிக்கின்றனர், கல்லூரியிலும் விடுதியிலும் ஆங்கிலம் மட்டுமே பொது மொழி.


வாய்ச்சொல் வீரர்கள் எங்களைப் போல் சிலருக்கு மட்டும் தெலுங்கு கற்றுக்கொள்வதில் தீராத ஆர்வம். விடுதியில் உள்ள தெலுங்கு நண்பர்களிடம் அவ்வப்போது தெலுங்கு கற்று தரச்சொல்லி தெரிந்து கொள்வோம்.(இலக்கணம் மாறாமல் அவர்கள் முதலில் சொல்லி தந்தது என்னவோ 'அந்த மாதிரி' வார்த்தைகள்தாம்)

மெல்ல மெல்ல 6 மாதங்களுக்குள் குறைந்த பட்ச (நல்ல)வார்த்தைகளுடன் 'மாட்லாட' கற்றுக்கொண்டோம். எங்களின் தெலுங்கு புலமையை எங்காவது சோதித்துப் பார்க்க தோதான நேரம் பார்த்து காத்திருந்த சமயத்தில் வந்தது தஸ்ரா விடுமுறை. இந்த மாதிரி விடுமுறை காலங்களில் குறிப்பிட்ட நேரம் வரை வெளியில் செல்ல அனுமதி உண்டு, என்ன ஆனாலும் சரி இன்னிக்கு டெஸ்ட் பண்ணி பார்த்திட வேண்டியதுதான் என்று வெளியில் நாங்கள் மூவர் மட்டும் கிளம்பினோம்.

மொழி புலமையின்(!)  மீது உள்ள நம்பிக்கையால், எங்கே fancy shop சென்றால் ஆங்கிலம் பேசி நம் திறமை வெளிப்பட வாய்ப்பு இல்லாமல் செய்துவிடுவரோ என்றெண்ணி, சோள கதிர் விற்றுகொண்டிருந்த ஒரு கிராமத்து பெண்ணிடம் சென்று சோளகதிர் வாங்க பேரம் பேச ஆரம்பித்தோம்

நாங்கள்: நமஸ்காரம்ண்டி..

(அப்பெண் திடுக்கிட்டு..): ஏமுண்டி.. ஏமி காவாலி

(பின் நிகழபோவது தெரியாமல் அப்பெண் நினைத்திருக்கவேண்டும் ஆகா! என்ன மரியாத இந்த புள்ளைங்களிடமிருந்து..)

எங்களில் ஒருவன்: கதிர் எந்தா வெலயிலூ?
அப்பெண்: ஒரு கட்டு 3 ரூபாய் (என்றார் தெலுங்கில்)
எங்களில் ஒருவன்(யார்னு சரியா சொன்னா வூட்டுகாரி 'டின்' கட்டிடுவா): 2 ரூபாய்க்கு ஒஸ்தாரா..?
அப்பெண்: ஏமீ..
(சரியாக காதில் விழாமல், அப்பெண் மறுபடியும் கேட்கிறார் என்று நினைத்து)
மறுபடியும்: 2 ரூபாய்க்கு ஒஸ்தாரா..? என்றோம்

இம்முறை அப்பெண் சற்றே ஆவேசத்துடன் ஏமீ.. என எகிற
(நாங்கள் சுதாரித்திருக்கவேண்டும்... அப்போதே)
மறுபடியும்: 2 ரூபாய்க்கு ஒஸ்தாரா..? என்றோம்

அவ்வளவுதான் சத்தம் போட்டு கும்பல் கூட்டிவிட்டார்
எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வந்தவர்களிடம் என்ன சொன்னாளோ மகராசி.. எங்கள கூறு போட மொத்த கூட்டமும் தயாராயிடுச்சி..

கூட்டதிலிருந்த ஒரு புண்ணியவான்(எங்கள் புலமை பற்றி முன்பே அறிந்திருக்க வேண்டும்) மட்டும் எங்கள் கல்லூரியின் பெருமை கருதி எங்களை காப்பாற்றி விட்டார்

இவ்வளவு கூத்துக்கு அப்புறமும் எங்களில் ஒருவன் செப்பியது யாதெனில் "பாக்கிறதுக்கு அவ நல்லாதான் இருந்தா.."

[புரியாதவர்களூக்கு: 2 ரூபாய்க்கு இஸ்தாரா (2 ரூபாய்க்கு தரியா) என்பதற்க்கு பதில் 2 ரூபாய்க்கு ஒஸ்தாரா(2 ரூபாய்க்கு வரியா) என்று சற்றே பிறழிவிட்டோம்.. ஹி..ஹி)]

Saturday, June 18, 2005

எங்கே என் தமிழ் பற்று?

நான் எப்போதும் என் தமிழ் பற்று மீது அதிக மதிப்பீடு கொண்டவன்.. என்னைப்போல் தமிழ் ஆர்வலர் எவருமில்லை என்று நினைப்பதுண்டு .
என் பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ் வழி படித்தவன். அந்த நாட்களில் நிறைய தமிழ் நூல்கள் படிப்பதுண்டு, பட்டிமன்றங்களில் பங்கேற்பதுண்டு, எங்கள் குடும்பமும் திராவிட இயக்க கொள்கைகளில் ஈடுபாடு கொண்டது.   எனவே எனக்குள் தமிழார்வம் உள்ளதில் ஆச்சர்யம் இல்லை


விஷயத்திற்கு வருவோம். நானும் ஒரு நாடோடி.. அமெரிக்காவில் குடியேறும் முன் பல நாடுகளில் வேலை பார்த்தேன். குறிப்பாக அய்ரோப்பாவில் பணியில் இருந்த போது சுட்கர்ட்(Stuttgart) நகரில் தங்கியிருந்தேன், அப்போது (1997ல் ) பல ஈழ தமிழ் சகோதரர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது, அவர்களுடன் பழகிய பிறகுதான்  என் தமிழார்வமும் உணர்வும் எள்ளி நகையாடுமளவே என தெளிந்தேன்.

தமிழ் நாட்டிலிருந்து வரும் தமிழன் என்றாலே அவர்கள் அளிக்கும் மரியாதை, அன்பு அனைத்துமே மெய் சிலிர்க்க வைக்கும்.  அங்கு அரிசி கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, கடைக்கு வந்த உடனேயே தீர்ந்துவிடும். எங்கள் குழுவில் நான் மட்டுமே தமிழன். கடை வைத்திருப்பது ஒரு ஈழ சகோதரர், அவர் எனக்கென்றே எடுத்து வைத்திருப்பார்.

லுக்சம்பர்க்கில்(Luxemburg) இருக்கும் போதும் அப்படிதான், மெக்டொனல்சில் லன்ச் சாப்பிடும் போது ஒரு ஈழ சகோதரி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக எனக்காக காத்திருந்து பேசிவிட்டு சென்றார். ஆச்சர்யம் என்னவென்றால் எனக்கு அவரை முன்பின் தெரியாது, தமிழ்நாட்டிலிருந்து வந்தவன் என்ற ஒரே காரணத்தால் தன் உறவினர் போல் என்னை பாவித்தார்.

இன்றும் எண்ணிப்பார்க்கிறேன் ஏன் மற்ற பகுதியிலிருந்து வரும் தமிழர்களால் அவர்களைப் போல உணர்வு பூர்வமாக இருக்கமுடிவதில்லையென்று? அல்லது அவர்களை போல் ஒருவரை நான் சந்திக்கவில்லையா???..

This page is powered by Blogger. Isn't yours?